நாச்சியார் திருமொழித் தனியன்கள்
திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச் செய்தது
அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன்துணைவி *
மல்லி நாடாண்ட மடமயில் – மெல்லியலாள் *
ஆயர் குல வேந்தனாகத்தாள் * தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு
முதலாவது வானமாமலை ஸ்வாமி அருளிச் செய்தது
கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் * தென் திருமல்லி நாடி * செழுங்குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
சோலைக் கிளி * அவள் தூய நற்பாதம் துணை நமக்கே
(504)
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.
(505)
வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில்
புகவென்னை யெய்கிற்றியே
(506)
மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே
(507)
சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே
(508)
வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே
(509)
உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களைக் கொண்டுவைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய்
(510)
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனேஉன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
(511)
மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடை திறலுடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்
(512)
தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்
அழுதழு தலமந்தம் மாவழங்க ஆற்றவு
மதுவுனக் குறைக்குங்கண்டாய் உழுவதோ
ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே
(513)
கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்தங்கோர் கரியலற
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே
