(2739)-(2741)

………    ……………     ……………    போர்வேந்தன்

 

தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து ,

பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,

மன்னும் வளநாடு கைவிட்டு , – மாதிரங்கள்         (2739)

 

மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு

கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,

பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,

கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன் (2740)

 

துன்னு வெயில்வறுத் த வெம்பரமேல் பஞ்சடியால்,

மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,

அன்ன நடைய அணங்கு நடந்திலளே?                (2741)

 

பதவுரை

போர் வேந்தன்

ரணாசூரனாகிய இராமன்

தன்னுடைய தாதைபணியால்

தன் தகப்பனான சதரதனுடைய சொற்படி.

அரசு ஒழிந்து

ராஜ்யமாள்வதைத்தவிர்ந்து (காட்டுக்குப் புறப்பட்டபோது)

பொன் நகரம்

அழகிய அயோத்யாபுரியிலுள்ளாரடங்கலும்.

பின்னே புலம்ப

(நீ காட்டுக்குப்போகேல் என்று) பின்னா லழுது கொண்டே வந்தபோதிலும்

வெண்டர்

என்னவேணும்

வலம் கொண்டு

தான்கொண்ட உறுதியை விடாமுற்கொண்டு

வளம் மன்னும் நாடு கை விட்டு

செல்வம் மிகுந்த நாட்டை உபக்ஷித்துவிட்டு

மாதிரங்கள் மின் உருவின் வெண்தேர் திரிந்து

திக்குகள்தோறும் மின் போன்ற கானலே பரவி யிருக்கப் பெற்றதும்.

வெளிப்பட்டு

எல்லாம் சூந்ய ஸ்தலமாகவுமிருக்கப் பெற்றதும்

கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று

கல்லுகள் நிறைந்து (புல்லுகள்) தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சுழல்காற்று அடித்துக்கொண்டிருக்கப்

பெற்றதும்

பின்னும் அதற்குமேலும்

 

திரை வயிறு பேயேதிரிந்து உலவா

(ஆஹாரமில்லாமையால்) மடிந்த வயிற்றேயுடைய பேய்களே திரிந்துகொண்டிருக்கப்பெற்றதும்

கொல் நவிலும் கொலையைப் பற்றின சப்தமே கிளம்பிக்கொண்டிருக்கப்பெற்றதுமான

வெம்காணத்தூடு

வெவ்விய காட்டினுள்ளே

கொடு கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பால் மேல்

உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்வியபருக்கைக் கற்களின்மேலே (எழுந்தருளின வளவிலே)

வைதேவி என்று உரைக்கும்

வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய்

மன்ன்ன் இராமன் பின்

அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே

பஞ்சு அடியால்

பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே

நடந்திலளே

தானும் நடந்து செல்லவில்லையா?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆசையின் மிகுதியாலே நாணந்தவிர்ந்து நாயகன் பின்னே போவதும், நாயகனை பலாத்காரத்தாலே தனக்காக்கிக் கொள்வதும் நாயகளைப் பெறுதற்கு அரிய பெரிய ஸாதநங்களை அநுஷ்டிப்பதும் இவையெல்லாம் மடலூர்வதற்குப் பர்யாயமேயாம் என்பது ஆழ்வார்திருவுள்ளம். தமிழர்கள் ஏதோ எழுதி வைத்திருக்கிறபடி மடன்மாவேறினால்தான் மடலூர்ந்த்தாக இவருடைய அபிப்பிராயமில்லை, ஸ்த்ரீகளுக்கு இன்றியமையாத ஸ்வரூபமாகிய நாணத்தைக்காத்து மரியாதை வழுவாமல் நிற்கிறநிலை குலைந்து நாணம் நீங்கினபடியை வெளியிடுகின்ற செய்தி எதுவாயிருந்தாலும் அது மடலூர்வதொக்குமென்றாயிற்று ஆழ்வார் திருவுள்ளம்பற்றியிருப்பது. அப்படி நாணந்துறந்து அதிப்ரவருத்தி பண்ணின பெண்ணரசிகளின் சரித்திரம் வடமொழியில் இதிஹாஸ புராணங்களில் எராளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றதில் நாலைநது பெண்களுடைய செய்தியை எடுத்துச்செல்ல உத்தேசிக்க ஆழ்வார், முதலில ஸீதாபிராட்டியின் நடத்தையை எடுத்துக்காட்டுகின்றார்.

கைகேயியின் சொற்படி நடக்கவேண்டியவனான தசரத சக்ரவர்த்தி இராமபிரானை அழைத்து வாஸஞ் செல்லுமாறு நியமிக்க அந்த நியமனத்தைச் சிரமேற்கொண்ட இராமபிரான் வனத்திற்குப் புறப்படுங்காலத்தில் ஸிதாதேவியிடஞ் சென்று இச்செய்தியைத்  தெரிவித்து ‘நான் போய் வருகிறேன், வருமளவும் நீ மாமனார்க்கும் மாமியார்க்கும் ஒரு குறைவுமின்றிப் பணிவிடை செய்துகொண்டிரு என்று சொல்லுங்கால் தன்னை நிறுத்திப் போவதாகச் சொன்ன வார்த்தையைக் கேட்ட பிராட்டி மிகவும் கோபித்து ‘என்தகப்பனால் உம்மை ஒரு ஆண்பிள்ளையாக எண்ணி என்னை உமக்குக் கொடுத்தார் ஒரு பெண்டாட்டியை கூட கூட்டிக்கொண்டுபோய்க் காப்பாற்றி ஆளத்தக்க வல்லமையற்றவர் நிர் என்பதை அப்போது அவர் அறிந்திலர் இப்போது அவர்இச்செய்தியை கேட்டால் உம்மை நன்றாக வெகுமானிப்பார் ஒரு பெண்பிள்ளை ஆணுடை யுடுத்துவந்து நம் பெண்ணைக் கைக்கொண்டு போய்ந்துக்காண் என்று நினைப்பர் என்று ரோக்ஷந்தாற்ற வார்த்தை சொல்லி தன்னையுங் கூட்டிக்கொண்டு போகவேணுமென்று நிர்பந்தித்து காட்டு வழிகளின் கொடுமையையுங் கணிசியாமல் காமஸித்தயையே தலையாகக்கொண்டு போகவில்லையா? இது மடலூர்தல்லவா? என்கிறார்.

தாத என்ற வடசொல் தாதையெனத் திரிந்தது. வலங்கொண்டு – (பலம்) என்ற வடசொல் வலமெனத்திரிந்தது. மனவலிவைச் சொல்லுகிறது. கொண்ட காரியத்தைக் குறையறத் தலைக்கட்டியே விடும்படியான அத்யவஸாயம். மன்னும் வளகாடு –மன்னும் –குலக்ரம்மாகத் தனக்கு ப்ராப்தமான என்றுமாம். மாதிரங்கள் –மாதிரம் என்று ஆகாயத்துக்கும் திசைக்கும் பூமிக்கும் மற்றும் பலவற்றுக்கும் வாசகம் “விண்டேர் திரிந்து“ என்று பாடம் வழங்கிவந்தாலும் வெண்டேர் என்றே உள்ளது பிரயோகங்களும் அப்படியே. வடமொழியில் ம்ருகத்ருஷ்ணா என்று சொல்லப்படுகிற கானல் தமிழில் வெண்டேர் என்றும் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும்.

வெளிப்பட்டு –செடி மரம் முதலியவை இருந்தால் வெய்யிலுக்கு அவற்றின் நிழலில் ஒதுங்கலாமே, அப்படி ஒன்றுமில்லாமல் பார்த்த பார்த்த விடமெல்லாம் வெளி நிலமாயிருக்கை. கல்நிறைந்து – வழிமுழுவதும் க்றகள் நிரம்பியிருக்கும். தீய்ந்து எனினும் தீந்து எனினும் ஒக்கும். மருகாந்தாரங்களிற் கண்ட விடமெங்கும் தீப்பற்றி எரிந்துகிடக்குமாய்த்து. கழை –மூங்கில். வெய்யிலின் மிகுதியினால் மூங்கில்கள் வெடித்துக்கிடக்கும் கால்சுழன்று எங்கும் சூறாவளியாய்க்கிடக்கும். சூறாவளி – சுழல் காற்று, மனிதரைத்தூக்கி யெறியுங்காற்று.

திரைவயிற்றுப்பேய் –ஜநஸஞ்சாரமுள்ள காடாயிருந்தால் அங்குள்ள பேய்களுக்கு எதாவது உணவு கிடைக்கும் வயிறும் நிரம்பியிருக்கும் நிர்ஜநமான காடாகையாலே பேய்கள் உணவின்றிச் சுருங்கி மடிந்த வயிற்றையுடைடயனவாயிருக்கும். திரிந்துலவா – உலவுதலாவதும் ஒழிதலும், திரிந்துலவா என்றது திரிந்து மாளாத என்றபடியாய் எப்போதும் பேய்களே திரிந்துகொண்டிருக்கிறகாடு என்னவுமாம்.

வைதேவி – ஸீதைக்கு வடமொழியில் வைதேஹீ என்று பெயர். விதேஹராஜனான ஜநகனது மகள் என்றபடி. அணங்கு – தெய்வப்பெண் “சூருமணங்கும் தெய்வப்பெண்ணே“ என்பது நிகண்டு.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top