(1912)

(1912)

தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன் தோழிமா ராரு மில்லை,

சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை யாடு மிடம்கு றுகி,

பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்,

நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய் என்செய்கேன் என்செய் கேனோ.

 

பதவுரை

நங்காய்

யசோதைப்பிராட்டியே!

தந்தை

(இப்பெண்பிள்ளையின்) தகப்பனார்

புகுந்திலன்

வீடுவந்து சேரவில்லை,

நான் இங்கு இருந்திலன்

நானும் வீட்டிலிருந்திலேன்

தோழிமார் ஆரும் இல்லை

தோழியரும் ஒருவருமில்லை

சந்தம் மலர் குழலாள்

பரிமளம்மிக்க பூக்களை யணிந்த கூந்தலை யுடையளான என்மகள்

தனியே

ஒருத்தியாயிருந்துகொண்டு

விளையாடும் இடம்

விளையாடிக்கொண்டிருந்த விடத்திலே

குறுகி

சென்று கிட்டி

பந்து பறித்து

(அவளது கையில் நின்றும்) பந்தைப்பிடுங்கியும்

துகில் பற்றி கீறி

துணியைப் பிடித்துக் கிழித்தும்

படிறு செய்யும்

தீம்புகளைச் செய்கிற

படிறன்

தூர்த்தனாகிய

நந்தன் மதலைக்கு

கண்ணன் விஷயத்திலே

இங் என் கடவோம்

இவ்விடத்தில் என்ன செய்யக் கடவோம்?

என் செய்கேன் என் செய்கேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒரு ஆய்ப்பெண் பந்தடித்துக் கொண்டிருந்த தனியிருப்பிலே கண்ணபிரான் சென்று செய்த தீமைகளைச் சொல்லி ஓரிடைச்சி முறையிடும் பாசுரமிது. கன்றுகாலிகளை மேய்க்க வெளியிற்சென்ற வீட்டுத் தலைவர் வீடு வந்து சேர்ந்திலர், நானும் தயிர் மோர் முதலியன விற்க வெளியே போயிருந்தேனாதலால் வீட்டிலிராதொழிந்தேன். பெண்ணின் தோழியர்களும் பிரிந்திருந்தார்கள், இந்த நிலைமையில் என் மகள் “காரார் குழலெடுத்துக் கட்டி, கதிர்முலையை வாரார வீக்கி மணிமேகலை திருத்தி, ஆராரயில் வேற்கணஞ்சனத்தின் நீறணிந்து, சீரார் செழும்பந்து கொண்டடியா நின்றேன்நான்“ என்றாற்போலே அலங்காரங்கள் செய்துகொண்டு தனியே பந்துவிளையாடல் பயில்பவளாயிருந்தாள். இவன்தான் ‘எந்தப் பெண் எந்த வேளையில் எங்கே தனியேயிருப்பள்’ என்று ஆராய்ந்து திரியுமவனாகையாலே அங்கே அடியொற்றினான், அவள் கையில் நின்றும் பந்தைப் பறித்தான், அதைப் பறித்துக்கொண்டு பேசாமற்போய்விடலாமே, தான் வந்து அதிக ப்ரஸங்கங்கள் செய்ததைப் பலருமறிந்திட வேணுமென்று அவளுடைய புடவையைப் பற்றிக் கிழித்தான், இவனோ தீம்பனென்று ப்ரஸித்தி பெற்றவன், இவன் செய்த தீம்புகளை இன்னமும் நான் விவரித்துச் சொல்லவேணுமோ? படிறு செய்தானென்று சுருங்கச் சொல்லலாமத்தனையன்றி அதிகமாக ஒன்றுஞ் சொல்லகில்லேன். இங்ஙனே பெருந்தீம்பனான நந்தகுமாரன் கீழே நாங்கள் எங்ஙனே குடியிருக்கவல்லோம்? செய்வதொன்ற்றியேனே என்கிறாள்.

 

English Translation

O Lady Yasoda! My flower-coiffured-daughter was playing oil by herself; Her father had not returned. I too was not here.  None of her companions were with her. This naughty son of Nanda went there, snatched her ball, grabbed her dress and tore it. What can we do to stop him?  Alas, what shall I do, what shall I do?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top