(1868)

(1868)

ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம்

சோத்தம் நம்பீ. சுக்கி ரீவா உம்மைத் தொழுகின்றோம்

வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே

கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே.

 

பதவுரை

இராமன்

இராமபிரானுடைய

திருநாமம்

திருநாமங்களை

நா தழும்ப

நாக்குத் தடிக்கும்படி

எத்துகின்றோம்

வாயாரச்சொல்லித் துதிக்கின்றோம்.

நம்பீ சுக்கிரீவா

ஸுக்ரீவமஹாராஜரே!

சோத்தம்

இதோ அஞ்ஜலி

உம்மை தொழுகின்றோம்

உம்மைத் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றோம்

உங்கள் வானரம்

நீங்களிட்ட வழக்காயிருக்கின்ற வானரவீரர்கள்

எம்மை கொல்லாமே

எங்களைக் கொல்ல நினையாதபடி

வார்த்தை பேசீர்

ஒருவார்த்தையருளிச் செய்யவேணும்

கூத்தர் போல

கூத்தாடக்கற்றவர்கள் போல

குழமணிதூரம் ஆடுகின்றோம்

உங்கள் வெற்றியும் எங்கள் தோல்வியுந்தோற்ற ஆடுகின்றோம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாசுரந்தொடங்கும்போதெ “ஏத்துகின்றோம் நர்த்தழும்ப இராமன் திருநாமம்” என்ற அழகை என்சொல்வோம்! “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந் கதா – ராமபூதம் ஜகதபூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸதி.“ (இராமபிரான் அரசாட்சி புரிந்த காலத்திலே ஜனங்களனைத்தின் வாயிலும் ஸ்ரீராமநாமப்ரசம்ஸை தவிர வேறொன்றும் வந்ததில்லை, உலகமே ராம்மயமாக ஆய்விட்டது) என்றாப்போலே இலங்கையும் ராமநாம மயமாக ஆய்விடுகின்றதிப்போது நாக்குத் தடிக்கும்படி ஸ்ரீ ராமநாமங்களையே சொல்லித் துக்கின்றோமென்கிறார்கள்.

நம்பீசுக்கிரீவா! சோத்தம் – அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சப்த விசேஷம் சோத்தம் என்பதாம். ‘ஸ்தோத்திரம்’ என்னும் வடசொல் சோத்தமெனத் திரிந்துகிடக்கிறது என்பாருமுளர். ஸுக்ரீவ மஹாராஜனே! இராமபிரானுடைய தயவுக்கும் வாநர முதலிகளின் தயவுக்கும் உறுப்பாக உம்முடைய அநுக்ரஹமே முக்கியமாக வேண்டியிருத்தலால் உம்மைக் கைகூப்பித் தொழுகின்றோம். உங்கள் வானரப்படை எங்களைக் கொல்லாதபடி வார்த்தை பேசி யருளவேணுமென்கிறார்கள்.

‘வார்த்தைபேசீர்’ என்றது – ‘நீர் எங்களோடு வார்த்தை சொல்லவேணும் என்பதாகவும் ‘நீர் குரங்குகளிடம் ஒரு வார்த்தை சொல்லவேணும்’  என்பதாகவும் பொருள்படும். முந்தினை பொருளையே பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார். அரசன் ஒருவனோடே வார்த்தை சொன்னால் அதைக் காண்கின்ற ராஜ புருஷர்கள் ‘இவன் நம் அரசனுக்கு அந்தரங்கன் போலும்’ என நினைத்து அவர்களும் அவனிடத்து அன்பராயிருக்கக் கடவராகையாலே, உம்முடைய முதலிகள் எங்களை உம்முடைய அந்தரங்கராக நினைத்துக் கொள்ளுமாறு நீர் எம்மோடே வார்த்தை சொல்லுவீராக என்கிறார்களென்க.

முன்பு விபீஷணாழ்வான் ராமகோஷ்டியில் வந்து புகும்போது, ‘சத்ருபக்ஷத்தில் நின்றும் வந்த இவனை இங்குச் சேர்த்துக்கொண்டால் குடிகெட்டுப் போய்விடும்’ என்று இடையூறு செய்தவர்களில் ஸுக்ரீவன் தலைவனாதலால் அதனையறிந்து போலும் இவர்கள் அவனையே கால்கட்டுகிறார்கள்.

 

English Translation

O Lord Sugriva, we salute you, Hail! we praise the name of Rama till our tongues swell, Pray tell your monkey clan not to kill us! Like entertainers, we dance the kulamani Duram

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top