(1846)

(1846)

கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை,

மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர்,

மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்,

தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே.

பதவுரை

கோவை இன் தமிழ்

ஒழுங்குடைத்தான இனிய தமிழ்ப்பாசுரமாகிய இத்திருமொழியை
பாடுவார்

(விரும்பி ஆதரித்துப்) பாடக்கூடியவர்களும்,
குடம் ஆடுவார்

குடமெடுத்து ஆடுமாபோலே (ப்ரீதிக்குப்போக்கு வீடாக) நர்த்தனஞ் செய்பவர்களும்
தட மா மலர் மிசை மேவு

மிகப்பெரிய (திருநாபிக்) கமலத்தின்மீது பொருந்தியுள்ள
நான் முகனில்

பிரமனிற்காட்டிலும்
விளங்கு புரிநூலர்

விளங்குகின்ற யஞ்ஞோப வீதத்தையுடையவர்களும்
மேவு நால் மறை வாணர்

நான்கு வேதங்களையும் விரும்பிக் கற்றவர்களும்
ஐவகை வேள்வி

பஞ்சமஹாயஜ்ஞாநுஷ்டா நத்திலும்
ஆறு அங்கம்

வேதாங்கங்கள் ஆறையும் பயில்வதிலும்
வல்லவர்

ஸமர்த்தர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
தொழும்

வணங்கப்பெற்ற
தேவதேவபிரான்

தேவாதிதேவன்
திருக்கோட்டியூரான்

திருக்கோட்டியூரிலுள்ளான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாசுரத்தின் முதல் மூன்றடிகளும் திருக்கோட்டியூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின் சிறப்பைக் கூறுவன. இத்தலத்து ஸ்ரீவைஷ்ணவர்களின் சிறப்பு ஒப்புயர்வற்றது, பெரியாழ்வார் திருமொழியிலும் “நா அகாரியஞ் சொல்லிலாதவர் நாடொறும் விருந்தோம்புவார், தேவகாரியஞ்செய்து வேதம்பயின்று வாழ் திருக்கோட்டியூர்“ என்றும், “குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய்ச், செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்“ என்றும், “பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால், ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்“ என்றும், “காசின் வாய்க் கரம் விற்கிலுங் கரவாது மாற்றிலி சோறிட்டுத் தேவசார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்“ என்றும் ஸௌம்ய நாராயணனுடைய வைபவத்திற்காட்டிலும் அவ்விடத்துப் பாகவதர்களின் வைபவமே போரப்பொலியக் கொண்டாடி யுரைக்கப்பட்ட தென்பது உணரத்தக்கது.

கோவையின் தமிழ் பாடுவார் – “கோவையையுடைத்தாய் இனிய தமிழான இத்திருமொழியைப் பாடுவார்“ என்பது வியாக்கியானம். இத்திருமொழி ஆழ்வார் திருவாக்கில் நின்றும் பூர்த்தியாக அவதரிப்பதற்கு முன்னமே திருக்கோட்டியூர் ஸ்வாமிகள் இதனைப் பாடிக்கொண்டிருப்பதாக இங்கு அருளிச் செய்வது எங்ஙனே பொருந்தும்? என்று சிலர் சங்கிப்பதுண்டு, கேண்மின், நம்மாழ்வார் “தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்“ என்றாப்போலே, பகவத் குணங்களில் ஈடுபட்டிருக்கும் பாகவதர்களின் நித்யாநு ஸந்தாநத்திற்காகவே அருளிச்செய்யும் திவ்யப்ரபந்தமாதலால், அவ்விடத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் இத்திருமொழியைக் கேட்டால் விடாதே விரும்பிப் பயின்று பாடுவர்களென்னும் நிச்சயத்தாலே இங்ஙனமருளிச்செய்யக் குறையில்லை யென்றுணர்க. கோவை – ஒழுங்கு. இனி, கோக்கப்பட்ட மாலைக்கும் பேராதலால் அதுபோலப் பரம போக்யமான தமிழ்ப்பாசுர மென்னவுமாம்.

குடமாடுவார் – “செருக்காலே திருவாய்ப்பாடியிற் படியாகக் குடக்கூத்தை யாடுவாராய்“ என்பது வியாக்கியானம். குடக்கூத்தாடுதலாவது -தலையிலும் இருதோள்களிலும் அடுக்குக்குடங்களை வைத்துக்கொண்டு கைகளிலே சில குடங்களையேந்தி யாடுவதொருகூத்து, இஃது இடையர் சாதிக்கு ஏற்ற கூத்து, இதனைத் திருக்கோட்டியூர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆடுவதாகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாதென்று விமர்சிப்பாருண்டு, இதற்குச் சிலர் சொல்லுவதாவது, பெரியாழ்வார் திருமொழித் தொடக்கத்தில் “வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க், கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்“ என்றும் “செந்நெலார் வயல் சூழ் திருக்கோட்டியூர் மன்னு நாரணன் நம்பி பிறந்தமை“ என்றும் கிருஷ்ணாவதாரத்திற்குத் திருக்கோட்டியூரை வேர்ப்பற்றாக அருளிச்செய்கையாலே இவ்வூரிலுள்ளார் திருவாய்ப்பாடியாயர்படியை ஏறிட்டுக் கொள்ளுதல் பொருந்து மென்பர், இது பொருத்தமான ஸமர்தான மென்று பெரியோர் கொள்கின்றிலர், பின்னைப் பொருளென்னென்னில், ;குடமாடுவார் என்றது இடையர்களது குடக்கூத்தையே ஆடுகிறவர்களென்றபடியன்று, அதை உபலக்ஷணமாகக் கொள்ளவேணும். இடையர்க்குச் செல்வச் செருக்குவிஞ்சினால் அதற்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடுவது போல இத்தலத்திலுள்ளாரும் கோவையின் தமிழ் பாடுதலாலும் நிரந்தரபகவத்குணா நுபவத்தாலுமுண்டாகும் ப்ரீதிக்குப் போக்குவீடாக “மொய்ம்மரம் பூம்மொழிற் பொய்கை“ என்னுந் திருவாய் மொழியிற்படியே ஸஸம்ப்ரமந்ருத்தம் பண்ணுவார்களென்பதாகப் பெரியோர் பணிக்கக் கேட்டிருக்கை.

தடமாமலர்மிசை மேவுநான்முகனில் விளங்குபுரிநூலர் – அத்யயநுஜ்ஞாநா நுஷ்டாநங்களில் * உந்திமேல் நான்முகனை வென்றவர்கள் என்றபடி. இதற்கே விவரணம் மேவுநான்மறையித்யாதி. நான்கு வேதங்களிலும் வ்யாஸபதம் செலுத்தவல்லவர்கள், வேதாங்கங்கள் ஆறையும் அதிகரித்தவர்கள், பஞ்ச மஹாயஜ்ஞங்களை யனுட்டிப்பதில் வல்லவர்கள். ஆக இப்படிப்பட்ட பரம வைதிக ஸ்ரீவைஷ்ணவர்களால் ஸேவிக்கப்படா நின்றுகொண்டு தேவ தேவ பிரான் திருக்கோட்டியூரிலெழுந்தருளி யிருக்கிற னென்றதாயிற்று.

English Translation

The Lord is sought after by sweet Tamil boards, pot-dancers and Vedic seers whose thread is brighter the lotus-born Brahama;s He is Devadevapiran, the Lord of gods, worshipped by seers adept in the four Vedas, the fire sacrifies and the six Angas in Tirukkottiyur

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top