(1838)
எங்க ளெம்மிறை யெம்பிரா னிமை யோர்க்கு நாயகன்,ஏத் தடியவர்
தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,
பொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி,
செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே.
பதவுரை
|
எங்கள் எம் இறை |
– |
எமக்கு அஸாதாரண ஸ்வாமியும் |
|
எம் பிரான் |
– |
எமக்கு உபகாரகனும் |
|
இமை யோர்க்கு நாயகன் |
– |
நித்யஸூரிகளுக்குத் தலைவனும் |
|
ஏத்து |
– |
துதிக்கின்ற |
|
அடியவர் தங்கள் தம் |
– |
பக்தர்களினுடைய |
|
மனத்து |
– |
நெஞ்சிலே |
|
பிரியாது |
– |
பிரியாமல் பொருந்தியிருந்து |
|
அருள் புரிவான் |
– |
(அவர்கட்கு) அருள் செய்பவனுமான எம்பெருமான் |
|
(எவ்விடத்துள்ளானென்னில்) |
||
|
பொங்கு |
– |
மேன்மேலும் கிளர்கின்ற |
|
தண் |
– |
குளிர்ந்த |
|
அருவி |
– |
அருவிகளானவை |
|
புதம் செய்ய |
– |
தாவிப்பாய, |
|
பொன்களே சிதற |
– |
(அவ்வருவிகள் முகமாகப்) பொன்மணிகள் சிந்த |
|
இலங்கு ஒளி |
– |
(அதனால்) விளங்குகின்ற ஒளியையுடையதாயும் |
|
செம் கமலம் மலரும் |
– |
செந்தாமரைப்பூக்கள் மலரப்பெற்றதாயுமுள்ள |
|
திருக்கோட்டியூரான் |
– |
திருக்கோட்டியூரிலெழுந்தருளி யுள்ளான் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘எங்களிறை’ என்றோ ‘எம்மிறை’ என்றோ அருளிச் செய்தால் போதுமாயிருக்க ‘எங்களெம்மிறை’ என்பானேன்? புநருக்தியன்றோ? என்னில், ‘எங்களுக்கே இறை’ என்று திடமான அவயாரணந் தோற்றச் சொல்லவேண்டுவது ஆழ்வார்க்கு விவக்ஷிதமாதலால் இரட்டித்துச் சொல்லப்பட்டதென்க. பிறர்க்கும் ஸ்வாமியாய் எங்களுக்கும் ஸ்வாமியாயிருக்கிறனல்லன், எங்களுக்கே அஸாதாரண ஸ்வாமியா யிருக்கிறானென்கிறார். சரணாகதிகத்யத்தில் எம்பெருமானார் என்றதற்கு மேலும் விசேஷித்து அருளிச்செய்த்தும் இங்கு அநுஸந்திக்கத் தக்கது. ‘பிறர்க்கும் எமக்கும் பொதுவான ஸ்வாமியல்லன், எமக்கே அஸாதாரண ஸ்வாமி’ என்கிற விதற்குக் கருத்து யாதெனில், கேண்மின் பரவாஸுதேவனா யிருக்குமிருப்பு நித்யமுக்தர்களின் அநுபவத்திற்காக, வியூஹநிலை பிரமன் முதலானாருடைய கூக்குரல் கேட்கைக்காக. ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்கள் அக்காலத்திலிருந்தவர்கட்காயொழிந்தன. அந்தர்யாமியாயிருக்குமிருப்பு ப்ரஹ்லாதாழ்வான் பொல்வார்க்குப் பயனளிக்கும், அர்ச்சாவதார நிலையொன்றே எமக்கு ஜீவநம். ஸம்ஸாரிகளுக்கு முகங்கொடுக்கைக்காவே யன்றோ இது ஏற்பட்டது. குருடர்க்கு ஏற்பட்ட இடத்திலே விழிகண்ணர் புகுரலாமோ? விழிகண்ணர்க்கு ஏற்பட்ட இடம் குருடர்க்கு உதவுமோ? ஆகையாலே எமக்கே அஸாதாரண ஸேவ்யமாக வாய்ந்தது திருக்கோட்டியூர் நிலையென்கிறார். பதியே பரவித்தொழும் தொண்டரனைவரையும் ‘எங்கள்’ என்றதில் கூட்டிக்கொள்க. “அடியோமுக்கே யெம்பெருமானால் லீரோ நீர் இந்தளூரீரே!“ என்றருளிய பாசுரமும் இங்கு ஸ்மரிக்கவுரியது.
‘எங்களெம்மிறை’ என்றதிற்காட்டில் ‘எம்பிரான்’ என்றதற்கு வாசி என்னென்னில், ஸொத்தையுடையவன் என்பதுமாத்திரம் அதனால் சொல்லிற்று, ஸொத்துக்கு ஆவனசெய்யும் உபகாரகத்வம் இதனாற் சொல்லுகிறது. “இவன் நமக்கு உரியவன்“ என்னும்படி சேஷ்த்வத்திலே நிறுத்திவைப்பது மாத்திரமான ஸ்வாமித்வம் முதல்விசேஷணத்தின் பொருள். சேஷத்வத்தின் பயனான கைங்கரியத்தைக் கொள்ளுகையும், கைங்கரியம் செய்யுமிடத்து நேரும் இடையூறுகளை போக்கிப் பணிகொள்ளுகையும் இரண்டாவது விசேஷணத்தின் பொருளாக விவக்ஷிதம். பிரான் – உபகாரஞ் செய்பவன். அவிச்சிந்ந கைங்கரியங்கொள்ள பெறுவதையே உபகாரமாக நினைப்பர் மாஞானிகள்.
இப்படி எமக்கு ஸ்வாமியாயிருப்பதும் எமக்கு உபகாரகனாயிருப்பதும் வேறு அடியார்கள் அவனுக்கு இல்லாமையாலன்று, நித்யவிபூதியை ஒரு நாடாகவுடையவனா யிருந்து வைத்தும் “மீனுக்குத் தண்ணீர் வார்ப்பதுபோல அவர்கட்குக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கும் நிலைமை ஒரு சிறப்போ!“ என்று இங்கே போந்தருளி எங்களெம்மிறை யெம்பிரானா யிருக்கிறானென்னுங் கருத்துப்பட “இமையோர்க்கு நாயகன்“ என்கிறார்.
இப்படிப்பட்ட எம்பெருமான் திருக்கோட்டியூர் லெழுந்தருளியிருக்கிறனென்று சொல்லவேண்டி அத்தலத்தின் வளத்தைப் பின்னடிகளில் அருளிச் செய்கிறார். அருவிப் பெருக்குகள் குதிரை தாவுமாபோலே தாவித் தாவிப் பிரவஹிக்கும்படியை “பொங்குதண்ணருவி புதஞ்செய்ய“ என்றதனால் சொன்னாராயிற்று. கீழ்த்திருப்புல்லாணிப் பதிகத்தில் “வெண்திரை புரவியென்னப் புதஞ்செய்து“ என்றது காண்க. புதஞ்செய்தல் தாவிப்பாய்தல். பொன்களே சிதற என்றது அவ்வருவிப் பெருக்குகள் வாயிலாக ரத்னங்கள் கொழிக்கப்பட்டு வருதலைச் சொன்னவாறு.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “புதம் பொன்களே சிதற“ என்றெடுத்து “மேகம் பொன்களையே சிந்த“ என்று உரைக்கப்பட்டிருத்தலால் ‘புதம்’ என்னும் பதம் மீண்டும் அந்வயித்துக் கொள்ளப்பட்டதென்று கொள்ள வேணும். ‘அம்புதம்’ என்ற வடசொல் முதற்குறையாகப் புதம் என்று கிடக்கிறது, “புதமிகு விசும்பில்“ என்றவிடத்திற் போல.
‘சிதறுமிலங்கொளி’ என்றே பெரும்பான்மையாக வழங்கிவரம் பாடமும் வியாக்கியானத்திற்கு இணங்கியதே. பொன்கள் சிதறப்பெற்ற திருக்கோட்டியூர் என இயையும்.
English Translation
Our own dear Lord and Master is the Lord of gods, forever residing with grace in the hearts of those who worship him. He is the Lord of Tirukkottiyur where clouds rain streams of gold. Lighting up the place and making lotus buds blossom
