(2132)
எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, – களியில்
பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண்.
(2133)
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,
வண்ண மலரேந்தி வைகலும், – நண்ணி
ஒருமாலை யால்பரவி ஓவாது,எப் போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று.
(2134)
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்
புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு.
(2135)
அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குடம்முலைமல் குன்றம், – கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்
டட்டெடுத்த செங்கண் அவன்.
(2136)
அவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்
அவன்தமரே யென்றொழிவ தல்லால், – நமன்தமரால்
ஆராயப் பட் டறியார் கண்டீர், அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்.
(2137)
பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை,
ஆரே அறிவார்? அதுநிற்க, – நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்
அடிக்கமலந் தன்னை அயன்.
(2138)
அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,
உயநின் திருவடியே சேர்வான், – நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,
சொன்மாலை கற்றேன் தொழுது.
(2139)
தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,
எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,
அந்தரமொன் றில்லை அடை.
(2140)
அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்
தன்விலங்கை வைத்தான் சரண்.
(2141)
சரணா மறைபயந்த தாமரையா னோடு,
மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், – அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,
ஓராழி சூழ்ந்த வுலகு.
