(2427)

(2427)

வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்

றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, – எப்பாடும்

வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,

நாடுவளைத் தாடுமேல் நன்று.

 

பதவுரை

மா மதியை

‘சிறந்த (இந்த) சந்திரனை

மணி விளக்கு ஆ

மங்கள தீபமாக

வைப்பன் என்று

(திருமுன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)

கை நீட்டும்

உயரத்தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற

யானையை

ஒருயானையை (பிடிப்பதற்காக)

எப்பாடும்

நாற்புறமும்

வேடு வளைக்க

வேடர் சூழ்ந்து கொள்ள

குறவர்

(அங்குள்ள) குறவர்கள்

வில் எடுக்கும்

(அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக்கொண்டு போகுமிடமான

வேங்கடமே

திருமலையையே

நாடு

நாட்டிலுள்ளாரனைவரும்

வளைத்து

விரதக்ஷிணம் பண்ணி

ஆடுதும் ஏல்

(மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம்பண்ணப் பெற்றால்

நன்று

நல்லது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமலையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை வருணிக்கின்றாரிதில். ஆகாயத்திலே அழகிய விளக்குப்போல் தோன்றும் சந்திரனைக் கண்ட ஒரு யானையானது ‘இதனை நமது துதிக்கையினால் பிடித் தெடுத்து ஸ்ரீநிவாஸன் ஸந்நிதியில் நந்தாவிளக்காக வைத்திட்டால் நன்றாயிருக்கும்‘ என்று கருதி அச்சநதிரனைப் பிடிப்பதற்காக நீட்டின கை நீட்டினபடியே யிருக்கையில் அவ்யானையின் நோக்கமெல்லாம் சந்திரனைப் பிடிப்பதாகிற அக்காரிய மென்றிலேயே ஊன்றியிருந்ததனால் அந்த அந்யபரத்வத்தையே பற்றாசாகக் கொண்டு வேடர்கள் மெல்ல அருகில் வந்து வளைத்துக்கொள்ள குறவர் அம்பு தொடுக்கின்றனராம், ஆக இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையை நாமெல்லாரும் வலம் வந்து மகிழ்ந்து கூத்தாடுவோமாயின் இதுவே நமக்கு ஸ்வருபம் என்றாராயிற்று.

திருமலை சந்திரமண்டலத்தை எட்டியிருக்கின்றதென்று அதன் ஒக்கம் வெளியிடப்பட்டதாமிதனால், மலைகளில் சந்திரனை மிக்க ஸமீபத்திலிருப்பதாகக் காணும் மலைப்பிராணிகள் அவனைக் கைக்கொள்ள விரும்பிப் பல முயற்சிகள் செய்வது இயல்பு, 1.“நஞ்சுமிழ் நாகமெழுந் தணவி நளிர்மாமதியைச் செஞ்சுடர் நாவளைக்குந் திருமாலிருஞ்சோலையதே“ என்றதுங்காண்க.

மாமதியை மாலுக்கு மணிவிளக்கா வைப்பன் என்று கை நீட்டும் யானையை என்கிறாரே ஆழ்வார், யானை சந்திரனைப்பிடிக்க முயற்சிசெய்வது வெளிக்குத் தெரியுமேயன்றி இன்ன காரியத்திற்காக அதனைப் பிடிக்க முயல்கிறது என்பது தெரியமாட்டாதே, திருமலையப்பனுக்கு நந்தாவிளக்காக வைப்பதற்குப் பிடிக்க முயல்கின்றதென்று ஆழ்வார் எங்ஙனே அறிந்தார்? என்று சிலர் கேட்கக் கூடும் திருமலையில் பிறக்கப்பெற்ற பெருமையினால் அவ்யானைக்கு இப்படிப்பட்ட நற்கருத்தே இருக்கத்தகும் என்று திருவுள்ளம் பற்றினரென்க. அன்றியும், 2. “வாயுந்திரையுகளும்“ என்கிற திருவாய்மொழியிற்படியே பிறர் செய்யும் காரியங்களையெல்லாம் தாம் செய்யுங் காரியங்கள்போல் பகவத் விஷய ப்ராவண்யத்தால் செய்வனவாகவே கொள்வதும் மெய்யன்பர்களின் வழக்கமாகும்.

ஆழ்வார் சந்திரனைப் பார்க்கும்போது “இவன் திருவேங்கடமுடையானுக்கு நந்தாவிளக்காக அமையத்தரும்“ என்று தோற்றவே, இத்தோற்றமே அவ்விடத்து யானைக்கும் இருந்த்தாகக் கொண்டு கூறுதல் பொருந்தியதே

ஈற்றடியில் “ஆடுதுமேல்“ “ஆடுதிரேல்“ என்பன பாட பேதங்கள்.

 

English Translation

Way elephants on the hill raise their trunks to catch the full Moon and offer it to the Lord, when hunters surround them, but gypsies take up their bows and drive away the hunters, Good if we can gather there and dance in a circle.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top