(2157)

(2157)

வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா

மொழிநின்ற மூர்த்தியரே யாவர், – பழுதொன்றும்

வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த

சீரான் திருவேங் கடம்.

 

பதவுரை

வழி நின்று

பக்திமார்க்கத்திலே நிலைத்து நின்று

நின்னை தொழுவார்

உன்னை ஆச்ரயிக்கு மவர்கள்

வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர்

உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;

(இதைப்பற்றிச் சொல்லவேணுமோ?)

மண் அளந்த சீரான் திருவேங்கடம்

உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்கிற திருமலையே

பழுது ஒன்றும் வாராத வண்ணமே

ஒரு குறையு மில்லாதபடி

விண் கொடுக்கும்

(ஆச்ரிதர்களுக்கு) மோக்ஷமளிக்கக் காண்கிறோமன்றோ.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய திருமலை தானே தன்னைப் பற்றினார்க்கு நற்கதியைத் தரும் வல்லமையுடையதாயிருக்கையில், எம்பெருமானைத் தொழுமவர்கள் நற்கதிபெறுவாரென்று நாம் பெரிதாக எடுத்துச் சொல்லவேணுமோ? என்கிறார். கைமுதிக நியாயம் தோற்றப் பேசின பாசுரம் இது. மண்ணளந்த சீரானுடைய திருவேங்கடமே பழுதொன்றும் வராதவண்ணம் விண்கொடுக்குமதாயிருக்க, நின்னை வழிநின்று தொழுமவர்கள் வழுவாமொழிநின்ற மூர்த்தியராவரென்பது விசேஷித்துச் சொல்லவேண்டிய விஷயமோ என்றவாறு.

எம்பார் இப்பாசுரத்தை நாடோறும் சிற்றஞ் சிறுகாலையில் அநுஸந்திப்பது வழக்கமாம். “எம்பார் விடிவோறே அநுஸந்திக்கும் பாட்டு” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வருளிச்செயல்.

 

English Translation

The age-old Vedas declare that those who worship you by proper method will attain perfect self-knowledge.  But love for you as the Lord who measured the Earth grants the complete world of Vaikunta, O Lord of Venkatam!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top