(2111)

(2111)

தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்

தெளிதாக நன்குணர்வார் சிந்தை, – எளிதாகத்

தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,

போய்நாடிக் கொள்ளும் புரிந்து.

 

பதவுரை

உள்ளத்தை

மனத்தை

தெளிது ஆக

[ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவையுடைய தாம்படி

செம் நிறீஇ

செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தைமூட்டி]

ஞானம்

பகவத்விஷய பக்தியாலே

தெளிது ஆக

‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி

நன்கு

நன்றாக

உணர்வார்

அறிபவர்களுடைய

சிந்தை

மனமானது.

எளிது ஆக-

வருத்தமில்லாமல்

தாய்நாடு கன்றேபோல்

[பெரிய பசுக்கூட்டத்தினிடையே]  ‘தன் தாயைத் தேடிக்கொண்டு கிட்டுகிற கன்றைப்போல,

தண் துழாயான் அடிக்கே

குளிர்ந்த திருத்துழாய் மாலையையணிந்த எம்பெருமானது திருவடிகளையே

புரிந்து

விரும்பி

போய் நாடிக்கொள்ளும்

தானே சென்று தேடிச்சேரும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘உம்முடைய நெஞ்சுபோலே எங்களுடைய நெஞ்சு பகவத் விஷயத்திலே ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்க; அவர்கட்கு உத்தரமாக அருளிச்செய்வது போலும் இப்பாட்டு. பட்டிமேயவொண்ணாதபடி மனத்தையடக்கி எம்பெருமானோடு தமக்குள்ள உறவை அறிந்திருப்பவர்களின் மனமானது மற்றெவரையும் பற்றாமலும் ஐம்புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே பதறிக்கொண்டு மிக்க ஆவலுடன் சென்று கிட்டும்; ஒரு கன்றுக்குட்டியானது பல்லாயிரம் பசுக்களின் திரளினுள்ளே தனது தாயைக் கண்டுபிடித்துக்கொள்வது எப்படியோ அப்படியே இதுவும் . இதற்கு ஸம்பந்தவுணர்ச்சியே காரணம். ஸம்பந்தஜ்ஞான மில்லாதவர்களுக்கு ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று; அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸுலபம் என்றாராயிற்று.

மூன்றாமடியில் “ அடிக்கே” என்றும் “அடியே” என்றும் பாடபேதங்கள் …

 

English Translation

Clearing their hearts of dross, clear-thinking seers of steadfast devotion,  easily attain the feet of the Tulasi-garland Lord, like the calf finding the mother-cow through love.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top